Monday, November 29, 2010

அகன்ற வாயுடைய பூச்சி

எப்படி வந்திருக்க கூடுமது
எப்படியும் வந்திருக்கலாம்
தடயங்கள் ஏதுமின்றி  உள் நுழைந்ததன்
தகவல்கள் அறிந்தோர், யாரேனும்  உளரோ?
யாருமிருந்தாலென்ன?
சுகம் நிரப்பிய பச்சிலைச்சுருட்டி
ஈரமிழக்கவைக்கும்
இலைச்சுருட்டுப் புழுவின் லாவகத்தோடும்
குருத்தின் ருசியறிந்து ஒழுகும் எச்சிலோடு
வயல் முழுதும் குடியமர்ந்த
குருத்துப்பூச்சி மாதிரியும்.
பளிச்சிடும்  மாங்கனியின்
விதைக்குள் உடம்படக்கி சிதைக்கும்
அந்துப்பூச்சியின் லாவகம்  அதுக்கு
வாங்கிய கடனில் பிள்ளைகள் படிப்புறிஞ்ச
வயிறு சுருக்கி...மீந்தவற்றை
பாஸ்பேட்டாகவும், கராட்டேவாகவும் கொட்டித்தீர்த்த பின்னும்
வ(ளர்)ந்துக்கொண்டேயிருக்கிறது.
பிடுங்கித்திண்ணும்  வாழ்வழிக்க..
விட்டத்தில் கயிற்றை தொங்கவிட்டு தலை நுழைத்த போதுதான்
அது பற்றிய தகவலொன்று வந்தது.
விதையாகவும்.
பூச்சியாகவும்
உரமாகவும்
பூச்சிக்கொல்லியாகவும்  தகவமைத்துக்கொண்டு
மூன்றாம் தர உலகத்தின்
முதுகொடித்து ரத்தம் உறிஞ்ச
மேற்கிலிருந்து வந்த அகன்ற வாயுடைய பூச்சிதானாமது.

No comments: