Sunday, July 28, 2013

சூரியன் தனித்தலையும் பகல் நூலை முன்வைத்து


( சூரியன் தனித்தலையும் பகல் கவிதை நூலை முன்வைத்து)
வாழ்வின் நெடியதூரம் செறிவு மிகுந்த துயரத்தை மட்டுமே உடுத்திக்கொண்டு பிரவேசிக்கும் தமிழ்நதிக்கான பொழுதுகளனைத்திலும், ஏமாற்றங்களும், தவிப்புகளும் தாங்கவொணாத வேதனைகளும் புரையோடிக்கிடக்கின்றன. இவை அனைத்தையுமே துல்லியமானதொரு தளத்திலிருந்து பகிர்ந்துக்கொள்வதே சூரியன் தனித்தலையும் பகல்.
பேச்சிலிருந்து கவிதைக்கும், கவிதையினூடாக ஆழ்ந்த மெளனத்திற்கும் சென்று இறுதியில் தூய பிராந்தியத்திற்குப் போய் இயற்கை விதிகளுக்கு ஏற்பாட்ட நிர்மாணிக்கப்பட்ட நிசப்தங்களின் மீதானதொரு உலகத்தைச் சென்றடைகிற தமிழ்நதியின் கவிதைகளை வாசிக்கிறபோது உண்மையின் பொருட்டு பெரும்பாலனவற்றை இழக்க நேரிட்டவர்களின் வேதனையினை உள்வாங்கி ஈரம் கசிந்துருகும் நிலை வாய்க்கிறது.
தமிழ்ச் சூழலின் நவீன கவிதையின் பிதாமகனான பாரதியிடமிருந்த அநேக பிரதிபலிப்புகளில் ஒன்றாகிய வேதாந்த விசாரங்களை விதந்தோதுதலின் மீதேறி, தற்போதைய நவீன கவிதை என்பது விபூதி வீச்சமும், பூக்கள்வாசமும் கொண்ட கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களின் விரல்களுக்குள்ளாகவே பயணிக்கிறது. ஆனால் குருதி வீச்சமும், மரண ஓலமும் துப்பாக்கிச் சத்தமும், புலம்பெயர்தலும் அதிகாரவர்க்கத்தால் திட்டமிட்டு இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின், கவிதைச் சூழல் தமிழகத்தின் போக்குக்கு எதிர்மறையானது.
ஆரம்ப காலந்தொட்டே சமூக, அரசியல், வடுக்கள் போன்ற சகல கூறுகளையும், பதிசெய்யும் பொழுது அழகியலோடும், நேரடித்தன்மையோடும் பேசக்கூடிய ஒருவிதமான தொன்மத்தை தன்னகத்தே கொண்டு ஈழத்தின் கவிதைத்தளம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து மற்றுமொரு நம்பிக்கை பெறத்தக்க படைப்பினை சூரியன் தனித்தலையும் பகலாகத் தமிழ்நதி தந்திருப்பது என்பதானது, சமகாலச்சூழலில் ஈழத்தின் துயரரேகைகளைத் தவறின்றி புரிந்துக்கொள்ளும் மனநிலையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிடும்.
மயில் அகவும்/ வன்னியின் விறு கூடொன்றில்/ காதோரக்குழல் விலக்கி/ முத்தமிட்டுத் துயில் கலைக்கும் விடியலின்றி(காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி) என்ற வரிகளின் வழியாக சனநாயத்தின் அடிப்படை ஊற்றுக்கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான ஈழத்தின் சூழலிலிருந்து விலகிச் சென்றாலும், சென்றவிடத்திலுள்ள பாதுகாப்பாற்ற, நிச்சயமற்ற வாழ்க்கை முறையை அடையாளத்தை முன்னிறுத்துவதன் வாயிலாக, இவ்விடத்தில் கவனங்கொள்ளத் தக்கவராகிறார். வாழ்தலும், வாழ்தல் பொருட்டும் அவ்விடங்களில் நிகழ்த்தப்படும், அந்நியப்படுத்தப்படுதல், இவற்றினூடாக வியாபித்துப் படரும் துயரத்தின் பதிவாகவும் அமைந்துவிடுவதோடு, வேர்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அவசியத்தையும், இழையோடச் செய்துவிடுகிறார்.

இவ்வாறான பூகோள ரீதியிலான பாதுகாப்பு உணர்வினை ஏக்கமாக பதிவு செய்திருப்பதன் மூலமாக சனநாயகத்திற்கு எதிரான உளவியல் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால், பூமியின் எப்பகுதியிலும் துள்ளி வெளிப்படுகிற கொஞ்சநஞ்ச சனநாயக மதிப்பீடுகள்கூட மெல்ல அழிக்கப்பட்டுவரும், செய்தியையும் மனிதனினி உணர்வு என்பது சமூகவாழ்நிலையில் இருந்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் சொல்லிச்செல்கிறார். இத்தொகுப்பானது மேற்குறித்த ஏக்கம் நிரம்பிய அநேக குரல்களின் சாட்சியமாய் வாசிக்கக் கிடைக்கிறது.
கட்டிடக்காட்டின் முடிவில் தொடங்கும்/ ஊசியிலை மரச்செறிவைக் காணுந்தோறும்/ வன்னியில் பனிபெய்த விடியலில்/ மீள விழித்தெழுகிறேன்/ கடல்தாண்டி வருகிறது உளுந்து வாச்னை/ கூடவே பாம்புகளின் நினைவும்(ஞாபக வாசனை) என்ற வரிகளில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் சார்ந்து விளைகிற எதிர் எதிர் முரண்பாடுகளை இருவேறு வாழ்வியல் சார்ந்து சிறந்தவற்றை முன்னகர்த்தி நினைவுகளினூடாக தொனிக்கச்செய்கிறார்.
மேலும் முதல் உலகநாட்டு இருப்பும், அதனையொட்டிய பிரயத்தனங்களையும், குறிப்பிட்ட கட்டிடம், ஊசியிலை என்ற அதிகாரவர்க்கத்தின் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளார். அதனுடைய பரப்பரப்பினையும் இயந்திரகதியான அதனுடைய வாழ்க்கை முறையினையும் பகடிச்செய்வதற்காக உளுந்து, பாம்பு போன்ற உழைக்கும் வர்க்கத்தின் குறியீடுகளைக்கொண்டே பகடி செய்யும், செய்யுத்தி ஆழமானதொரு அரசியலை மிகச்சாதுர்யமாகப் பேசிச் செல்கிறது. இவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி எல்லோருக்கும் பொதுவானதொரு சூழலுக்குள் பயணிக்கவும் எத்தனிக்கிறார்.
அவலம் சூழ்ந்த மூன்றாம் உலகநாட்டுப் பிரதிநிதிகளான தங்களுடைய நிலமும், நிலம்சார்ந்த நிகழ்வுகளும் வாழ்வியலோடு சேர்ந்து பயணித்து முரண்பாடுகளைக் கொண்டு பேசுவதன் ஊடாக இதற்குள் யுத்தம், சீரமைப்பு, என்ற பெயரில் தங்களது வேரடி மண்ணைச் சிதிலமாக்கிக் கொண்டிருக்கும், முதல் உலகநாட்டு வணிக அரசியல் குறித்தும், படிம குறியீடு சார்ந்தும் இயங்கக்கூடிய இக்கவிதை அதி உன்னதம் பெறுகிறது.
வரலாற்றில் உண்மையான சிறப்புக்குறியவர்கல் வெகுமக்களும், அவர்களின் உற்பத்தி சார்ந்த உறவுகளும்தானேயன்றி, எப்போதும் தவறு செய்யக்கூடியவர்களான தனிப்பட்ட அதிகாரவர்க்கத்தினர் இல்லை. மேலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தோற்றுப்போனவர்களின் வரலாற்றைக்கூட அதிகாரவர்க்கத்தினரின் விரல்கள்தான் தீர்மானிக்கின்றன.
இதனை எதிர்த்து அவ்வப்போது ஆழமாகப் படர்கிற எதிர்வினைகள் எல்லாம் வெறும் கூச்சல், கலகம், என்ற முதலாளித்துவ சொல்லாடல்களின் மூலம் அதிகார வர்க்கம் நிராகரித்து விடுகிறது. என்ற கவனத்துக்குரிய அரசியல் ஒன்றைக் கீழ்வரும் அவரிகள் முன்வைக்கின்றன. புனைவுகளின் பெருங்கதையாடல்களில்/ தேவதேவதைகள் பேய்களாயினர்/ நமது எல்லோருக்குமான அதிகாரம்/ இதன் வழியாக புரையோடிப்போன வலியினையும், அதற்கு எதிரான மனநிலை வாய்க்கவேண்டும் என்றும் அழ்ந்த துணிச்சலோடு முன்வைக்கிறார்.
இன்றொரு நாள் எனினும் என்று தலைப்பிடப்பட்ட கவிதையில்.
அம்மா!மண்டியிட்டுக் கேட்கிறேன்/ உணவருந்தும் பீங்கானை/ இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேன்/ சிலீரென்றழும் ஓசையால் உறக்கமும், குழந்தைமையும் கலைக்கப்பட்ட/ அவ்விரவுகளை மீட்டெடுக்க/ என்ற வரிகளின் உள்ளடக்கமானது ஒருவிதமான பிரார்த்தனையுடன் அமைந்திருப்பது என்பது,பெண் தெய்வங்கள், இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடந்த காலத்திலும் செவிசாய்த்தனர் என்ற குறுங்கதையாடலுக்குரிய நம்பிக்கையாக இன்றும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் இழையோடுகிற தொன்மம் என்பது அதிகாரசக்திகளிடமிருந்து தங்களுக்கு வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் செயலை, தங்கள் நம்பிக்கைக்குரிய சிறுதெய்வத்திடமே விட்டுவிலகுதல் என்பது ஈழத்தின் போர்ச்சூழல் விளைவிக்கிற புலம்பெயர்தலில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்களது பகை சக்திகலை கற்பனையில் மட்டுமே வசப்படுத்தி, நிதர்சனமாக வென்றுவிடும் நம்பிக்கை, அவற்றில் மிளிர்கிறது.
எழுத்து, விடைபெறாத அரங்கம்,, பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது, ஒரு நாளும் இரண்டு அறைகளும், மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, நீரின் அணைப்பு, இப்படியாக தலைப்புகள் உள்ளடங்கிய தொகுப்பு

Wednesday, July 3, 2013

கேள்விக்குறி குறும்படம்



கேள்வி கேட்பது ரொம்ப ஈஸி, ஆனால் பதில்தான் ரொம்ப கஷ்டம், ஆசிரியர் கேள்வி கேட்குற இடத்திலே இருந்தால் எப்படி கொஞ்சம் கீழ் இறங்கி பதில் சொல்கிற இடத்திற்கும் வந்தால், வகுப்பறைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஆசிரியர்களும் குழந்தைகளாய் மாறிய பொழுது

கரும்பலகையில் சாக்பீஸ் பிடித்தே சோர்ந்துப் போன விரல்கள். பல ஆண்டுகாலமாக பிரம்போடு நட்பு பாராட்டிய கைகள்( சமீபநாட்களாக செயல்வழி கற்றலால் கொஞ்சம் விடுதலை ஆகியிருக்கிறது).

பாடப் புத்தகத்தை தவிர வேறு எதுவும் பார்க்க அனுமதிக்கப்படாத கண்கள். வாரம் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம். விடுமுறை நாட்களானால்  குடும்பம். இப்படியாகவே பயணித்து களைத்த கால்கள். இதுதான் சில வருடங்களுக்கு முந்தைய ஆசிரியர்களின் உலகம்.
ஆனால் முந்தைய அரசின் பள்ளிக்கல்வி துறையால், குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் மகிழ்வோடு வாழ தலைப்பட்டனர். 

ஆம்! செயல்வழி கற்றலும், அது தந்த மாற்றமும்தான். ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சமூகத்தை விடியலை நோக்கி பயணிக்க வைத்தது என்றால் அது மிகையானது இல்லை.
வெறும் பாடப்புத்தகமும், வகுப்பறையும், மதிப்பெண்ணும்,மாத்திரம் கல்வி அல்ல. குழந்தைகளை, அவர்களின் தேவைகளை, மையப்படுத்தி இயங்குவதுதான் உண்மையான சமூக அக்கறை நிரம்பிய கல்வி என்ற உறுதிதான் இன்றைய தினம் ஆசிரியர்களின் மனங்களில் களமாடிக்கொண்டிருக்கின்றன.

இப்படியான அழகிய மனங்களோடுதான் சத்திய மங்கலத்தில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி, புதிதாய் றெக்கைகள் முளைத்த, சின்னஞ்சிறு பறவைகளாய் பறக்கத் தொடங்கியிருந்தனர் ஆசிரியர்கள்.

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட குழுதான். இப்படியான உற்சாகமான ஆசிரியர்களை ஒருங்கிணைத்திருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் குருவிக்கூடு போல்  அமர்ந்திருக்கும் கெத்தேசால் கிராமத்தில்தான், எல்லா ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.
அடர்ந்த வனங்களும், அப்பழுக்கற்ற மனங்களும் இணைந்து உறவாடும் மலைப் பகுதிக்குள் பிரவேசிக்கத் தொடங்கிய அச்சிறுதருணம் தொடங்கி, வெளியேறும் பொழுது வரை யாருடைய மகிழ்வும் எதன் பொருட்டும் களங்கப்படவில்லை என்பதுதான் அந்த மாற்றுக் கல்விக்கான பயிற்சி முகாமிற்கு கிடைத்த வெற்றி.

அரை நூற்றாண்டு காலம் அறிவை முன்னிறுத்தி, கற்பனையை மழுங்கடித்த ஒரு கல்வி முறையை விட்டு விடுதலையாக துள்ளி வெளிப்பட்டனர் ஆசிரியர்கள்.
சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடி, மாற்றுக்கல்வியினூடாக, ஒரு மாற்று சமூகத்தை விளைவிப்பதற்கான விதைகளை உற்பத்தி செய்ய தொடங்கினார்கள்.

காலந்தோறும் புத்தக வாசிப்பானது ஆசிரியர்களை பொறுத்தவரை பாடப்புத்தகம் மட்டுமே என்றவாறே  நீடிக்கவே செய்தது. இன்றளவும் நீடிக்கவும் செய்கிறது.
அதுமட்டுமின்றி ஐந்தாண்டுகாலம் ஒரே புத்தகத்தை திரும்ப, திரும்ப வாசித்து தாங்கள் நம்பியதை அப்படியே குழந்தைகள் சமூகத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு எந்திரமாகவே ஆசிரியர்கள் பழக்கப்படுத்தப்பட்டு, கையாளப்பட்டார்கள்.

பாடப்புத்தகத்தம் தவிர்த்த மற்ற செய்திகளை வகுப்பறைகளில் பகிர்ந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளால் நசுக்கப்பட்டும், கிள்ளி எறியப்பட்டும் காயப்படுத்தப்பட்ட தருணங்களே ஆசிரியர்களுக்கு மிக அதிகமாய் வாய்த்திருக்கிறது.
வருகைப்பதிவேடு, பாடக்குறிப்பு புத்தகம், இப்படியே பார்த்தும், எழுதியும் சலித்த அந்த ஆசிரிய மனங்கள், வேறு எதற்கோ ஏங்கி தவித்திருக்க வேண்டும். குழந்தைகளைப் போன்று மேலதிக ஆர்வத்தோடு புத்தகங்களை வாசிக்கத்தொடங்கிய அந்த ஆசிரியர்களின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரத்தொடங்கின.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட குழுதான்  ஆசிரியர்கள் கூடி வாசிப்பதற்கான புத்தகங்களையும், அதற்கான சூழலையும் உருவாக்கி தந்திருந்தது
இந்திய கல்விச்சூழலில் இதுவரை கண்டுக்கொள்ளப்படாத மரங்கள், செடிகள், காட்சிப்படுத்தப்படாத மலைகள், மலைப்பற்றி வாழும் எண்ணற்ற நுண்ணுயிர்கள், சதா இசைத்தப்படி அடர்ந்த வனத்தை சுவாசித்து வாழும் பறவைகள், அதிகாரத்தால் நொறுக்கப்பட்டு, எஞ்சிய வனத்தோடு,தொப்புள் கொடி உறவு கொண்ட சோளகர் மக்கள் என எல்லாவற்றோடும் அந்த வாசிப்பு முகாம் களைக்கட்டத் தொடங்கியது.

எழுபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆறு குழுக்களாக பிரித்து, கூட்டாக உழைத்து வாசிக்கும் தருணத்தையும், அதனூடாக கிடைக்கப்பெறும் குதூகலத்தையும் கொட்டி நிரப்பத் தொடங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி.

பொதுவாக இன்றைய சமூகச்சூழலில் வாசிப்பதும், வாசிப்பதன் பொருட்டு உரை நிகழ்த்துவதும் ஏளனத்துக்குறிய ஒன்றாக சித்தரிக்கப்பட்டு வருவது வருத்தமான ஒன்றுதான். பள்ளி நூலகங்கள் எல்லாம் குழந்தைகளின் கைகள் படாமல் நூலாம் படைகளுக்குள் சிக்கி மரணித்துக்  கொண்டிருக்கின்றன.

மதிப்பெண்ணுக்கு குழந்தைகளை உற்பத்தி செய்யும் முனைப்பில் பெற்றோர்களும், பல பள்ளிகளும் நூலகங்களை கண்டுக்கொள்வதே இல்லை. பல குடும்பங்களில் குழந்தைகள் செய்திதாள்களை வாசிக்கும் சுதந்திரம் கூட மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இந்திய தொலைக்காட்சிகள் குழந்தைகளடங்கிய ஒரு குடும்பத்தை தன்வசப்படுத்த எல்லாவிதமான வேலைகளையும், சாதுர்யமாக நிறைவேற்றி அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனால் குழந்தைகளுக்கும், புத்தகங்களுக்குமான இடைவெளி நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்கிறது. இதனை வணிக ஊடகங்கள் திட்டமிட்டு செய்தப்படியே நிதமும் கல்லாக்கட்டுகிறது.

குழந்தைகளுக்கும், புத்தகங்களுக்குமான உறவை வளப்படுத்த வேண்டுமென்றால், முதலில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் புத்தகங்களுக்குள்ளாக பிரவேசிக்கும் சுகத்தையும், அதன் வாயிலாக கிடைக்கும் அனுபவத்தையும்  உணர்ந்தாக வேண்டும். இப்படியான உணர்தலை, புரிதலைதான் அந்த மூன்று நாள் வாசிப்பு முகாம் ஏற்படுத்தியது.
எழுத்தாளர் கமலாலயனும், ஆசிரியை சுடர் ஒளியும் ஆசிரியர்களின் மனம்பிடித்து புத்தகங்களுக்குள், கூட்டிச்சென்று, நூல்கள் குறித்த அறிமுகத்தையும், அவற்றின் பக்கங்களில் கசிந்துருகும் வாழ்க்கையையும் பகிர்ந்துக்கொண்ட தருணங்கள்,அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாத ஒன்று.

பாடப்புத்தகம் தவிர்த்த, புத்தக வாசிப்பானது அலாதியான பேரனுபவத்தை விதைப்பது. ஆளில்லா ஊருக்கு அழைத்துச்சென்று, பரவசப்படவைப்பது. காலத்தின் பேரோட்டத்தில் தொலைந்துப்போன நதிகளில் கால் நனைக்க வைத்து, பாழடைந்த மண்டப தூண்களின் மறைவில் ஒளிந்து விளையாட வைப்பது. மனித குல விடுதலைக்காய், நாள்தோறும் உழைத்து, களைத்துவிடாத போராளிகளுடன் உரையாட வைப்பது. வலியினை, துயரத்தை, மகிழ்வை நிறைத்து, பிசைந்து நிலாவைக்காட்டி சோறு திங்க  வைப்பது. இப்படியான பன்முக அனுபவங்களை எல்லாம் அந்த மூன்று நாட்கள், புத்தக வாசிப்பு முகாம் எல்லோருக்கும் இட்டு நிரப்பி வழியனுப்ப தவறவில்லை.

‘முதல் ஆசிரியன்”, “என்னை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க”, “பள்ளிக் கூடத்தேர்தல்”, “வாசித்தாலும், வாசித்தாலும் தீராதப்புத்தகம்” என புத்தகங்களுக்குள் முகம் புதைத்து பயணித்த ஆசிரியர்கள், திரும்பி வந்தபோது,   மனதுக்குப்பிடித்த தோழனோடு உரையாடி களித்த பேரின்பத்தை பெற்றிருந்ததை அறிந்துக்கொள்ள முடிந்தது.
வாய்ப்புகளை உருவாக்கி தந்தால், குழந்தைகள் மாத்திரமல்ல, நாங்களும் விஸ்வரூபம் எடுப்போம் என்று தங்களது படைப்பாற்றல் மூலம் வாசிப்பு முகாமை குளிரவைத்தப்படியே இருந்தனர் ஆசிரியர்கள்.

ஆசிரிய பணி குழந்தைகள் சமூகத்தை ஆரோக்கியமானதாக உருவாக்க கிடைத்த அளப்பரிய பணி. இதை நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கி நல்லாசிரியர் விருது பெற பயன்படுத்த மாட்டோம். மாறாக ஒரு சமூக மாற்றத்திற்கு தேவையான வீரியமான விதைகளை கண்டறிந்து, வளர்க்கவே கையாளுவோம், என்று  பகிர்தலின் போது, நம்பிக்கையோடு சொல்லிய  ஆசிரியர்களின் முகம் நிறைய மலர்ச்சி
.
மூன்று நாளும்  உணவு, குடி நீர், சுகாதாரம், இருப்பிடம் என எல்லாவற்றையும்  தாயுமானவர்களாக கூடவே இருந்து கவனித்தனர் சோளகர் இளைஞர்கள். அவர்களுடனே பம்பரமாய் சுற்றி சுழன்றபடியே இருந்தனர் அறிவியல் இயக்க நண்பர்கள்.
இன்றைய சூழலில் நாம் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும்  அவர்களுக்கு இயல்பான பிடித்தமான படைப்பூக்கமிக்க, அறிவியல் ரீதியிலான  மதிப்பீடு சார்ந்த கல்வியையோ, அதற்கான சூழலையோ உருவாக்கிக்கொடுத்திருக்கோமா?  இந்த கேள்விக்கான பதில் இன்னும் சூன்யமாகவே நீடிப்பது வருத்தம் தோய்ந்த ஒன்றுதான்.

இன்றைய உலகமயமாக்கல்  சூழலில்  நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகம்  விளைவிக்கும் உளவியல் ரீதியான தாக்குதல்களில் இருந்தும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குடும்பம் பெறும் அவமானங்களிலிருந்தும்  மீள்வதற்காக இருக்கலாம் அல்லது குடும்ப எதிரிகளுக்குப் பதில் சொல்வதற்காக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளை அதற்கான கருவிகளாக  மட்டுமே பயன்படுத்துகிறோம். குழந்தைகளை கற்பனை வளம் இல்லாத எந்திரங்களாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.

 குழந்தைகளின் அக உலகத்தையும், அவர்களின் இயல்புகளையும் புறந்தள்ளி, சிறு வயதிலேயே ஒரு அமெரிக்க குடிமகனாய் முன்னிட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோம். இன்றைய  அரிபரியான வாழ்க்கையின் வெற்றிப்படிகட்டுகளில் சக மனித உடல்களை நசுக்கி, போட்டியில் ஜெயிப்பதற்கான மனநிலையையும், அதற்கான பயிற்சியினையும், வன்முறையையும், சுயநலத்தையும் மாத்திரமே மிகச்சிறந்த கல்விச்சூழலாக மாற்றி வைத்திருக்கிறோம். அதையே நம் குழந்தைகள் சமூகத்திற்கு பரிசாகவும் அளித்திருக்கிறோம்.

இப்படியான ஒரு சமூகத்தில் இருந்து, துள்ளி வெளியேறவும், அன்பால் சக மனிதர்களை, இப்பிரபஞ்ச உயிர்களை நேசிப்பதற்கான மனநிலையை உருவாக்கும் ஒரு மாற்று சமூகத்தை வடிவமைப்பதற்கான, அனுபவரீதியான மாற்றுக்கல்வியை விளைவிக்கவும், இந்த ஆசிரியர்களாலும், இது போன்ற தொடர் வாசிப்பு முகாம்களாலும் சாத்தியப்படும் என்பதே உண்மையாக இருக்கிறது.