Saturday, October 30, 2010

ஊர்ந்துக்கொண்டிருக்கும் வலி

பரிமாறிக் கொள்ளநேர்ந்த பொழுதொன்றில்
உன்னால் தயாரித்தளிக்கப்பட்ட  தேனீர் கோப்பையிலிருந்து
கசிந்துருகியது  எதிர்பார்பற்ற நேசம்
இருத்தலின் பேரமைதி உடைத்து
தேடியபோது வெளிப்பட்டது  இருவருக்குமான  ஒரே வார்த்தை
நமக்கான  இடைவெளிகளினூடே
வந்திறங்கிய பேரிடியொன்றின்  கனம் பொறுக்காது...
வெளியேறின   கால உறைக்குள் கிடந்த  சாத்தியங்களனைத்தும்.
ஆடைகளின்  அழுக்ககற்றி...
புகைபடிந்த பாத்திரம் தேய்த்து
களைத்துப்போன  உனது  விரல்களனைத்தும்
எனை  மேவிக்கொள்ளும்  ஆகச்சிறந்த தருணமது.
துயரங்கள்  ஊர்ந்துபோகும்
உனது காலமறியாது, அவசரம் கூட்டுகிறேன்
சாத்தானின் மனநிலையோடு கணினி இயக்கி
பெருநகரவீதிகளில்...
எனக்கான ஆயுளை நீட்சியடைய செய்ய...
அநேக  கடவுளர்களிடம்  மண்டியிட்டு பிரார்த்திக்கும்
உனைப்பற்றி  அறிய நேர்கையில்
பனிபடர்ந்த  குளிர்நாளொன்றில்
பசிப் பொறுக்காத  நாய் குட்டியாய்...சுருண்டு  அடங்குகிறேன்.
உன்  நினைவணைத்து...

Thursday, October 28, 2010

என் துயரம் உனக்கு, பெரும் துயரம் பூமிக்கு


கூனிக்குறுகி சிறுகத்தரித்த மனங்களோடு....
சிலாகித்துப் பறக்கும் அன்புகள்.
அரைஞான் கயிற்றைப் பிடித்துக்கொண்டு
அதுதான் வழி என பின்தொடரும் கறைபடிந்த நினைவுகள்.
ஆல்கஹால் தலைக்கேறி... உணர்ச்சி பிழம்பெடுத்து
பிதற்றும்  நாழிகை நண்பர்கள்.
விழிகளில் பொய்தவழ, வியாபித்து செழிக்கும் அழுகிய சொற்களோடு
செய் நன்றிக்காய்...செலவழிக்கச்சொல்லும்  குரூரங்கள்.
நேர்மை விட்டொழித்து...
நியாயம் அடகு வைத்து...
குருதி பருக துடிக்கும் வாய் வார்த்தைகள் நம்பிக்கையற்ற பெருவெளியில்
அங்கோவொரு தவிட்டு சிட்டுக்குருவி...
எப்பொழுதோ..என் தானியக்குதிருடைத்து
கொத்தி பருக நேர்ந்த நொடிகள் நினைத்து..
என்னை மீட்டெடுக்கும்  இசைக்குறிப்புகளோடு வந்திருக்கிறது.
நேசமிழந்த...என்  வெந்நிறம் சுமந்த சாம்பல் நிறக்குருவி
சன்னல் திறந்திருக்கிறது....
ஒரே ஒரு சத்தம் சன்னமாய் ஒலிக்கிறது...
பெருகி வரும் ஒலி, பெரும் ஓலமாய்..
என் துயரம்  பிதற்றலில், குருவியின் துயரம் பேரண்ட வெளியில்
சிறு சீசாவில் சிக்கித்தவிக்கிறது என் நேசம்.
பூமியின் சிறுத்துகளில் கூட வெடித்து சிதறுகிறது  சாம்பல் நிற குருவியின்
குரலுடைத்து வெளியேறும்  ஆதிச்சொற்கள்