Sunday, August 8, 2010

காற்று...நீ...காமம்

பச்சையமிழந்து  வாழ்வழிந்த
இலைகளில் கால்பதித்து  நடை பழகியது காற்று
அதன் முதுகிலேறி, பறக்க நீள்கிறது வெந்நிற நேசம்
காணப்பொறுக்காது நீ வீசியெழுகிறாய்...
அழுகிய நாற்றம் பீடித்த நல்ல கெட்ட வார்த்தைகளை
உனதிருத்தல் தாண்டி தூரச்சென்றதன் விழிகள்
வியாபித்து படர்கிறது வெளியெங்கும்
மேலுயர்ந்த உந்தன் பார்வைகள்
தடுமாறி வீழ்கிறது குழந்தைகளின்
பசி நிறைக்கும் முலைகளிடத்து...
தொடையிடுக்கில் கைகள் பதித்து’
கழிவிரக்கமடைகிறது உன் காமம்
சுருண்டு அடங்குகினாய்...சிறு பரப்புக்குள்
வெற்றிக்கொண்டதென்னவோ...பிறிதிரண்டும்தான்

Friday, August 6, 2010

வண்ணத்துப்பூச்சியின் நிறங்களால் ஆனவன்

நிறுக்கல் ஆற்றினோ நன்று மண்தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை   இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொனதற்கு அரிதே
                                       -வெள்ளிவீதியார்

தூக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த கண்கள் இருட்டை முழுதுமாய், பதிவு செய்துவிடும் முனைப்பில் தீவிரம் கொண்டிருந்தது. நடந்து முடிந்தவைகள் எல்லாம் சோவென்று பெய்த பலத்த மழையில் அடித்துச்செல்லப்பட்ட தானியச்சிதறல்களாய் பரப்புகள் தாண்டிபோய் பதுங்கிக்கொண்டு ரணங்களை பிரசவித்துக்கொண்டிருந்தது.

ஏன்  இவனுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. என்று கவலைப்படும் ஆத்தா மட்டும் ஒவ்வொரு கோவிலாய் ஏறி இறங்கினாள். ஜோதிடர்களை எல்லாம் தேடிப்போய் அவனுடைய ஜாதகத்தை காட்டினாள். ஆனாலும் அவன் அப்படியேதானிருக்கிறான். முன்னோக்கி அவனை இழுத்துச்செல்லும் காலத்தின் கால்களில் மட்டும் துயர ரேகைகள் படிந்தேயிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் மனித முகங்கள் மோதிக்கொள்ளும் எந்தவொரு இடத்திலும்  அவனைப்பார்ப்பதே அரிதாகிவிட்டது. அநேக பொழுதுகள் இலங்கை வானம்பாடி தூக்கி வரும் பி.பி.ஸ்ரீனிவாசின் குரல்களில் நனைவதற்காய், ஆறேழு நிமிடங்கள், அறைக்குள் அடைகாத்துக்கொண்டிருப்பான். அதன் பிறகு குதூகலத்தோடு வெளிபறந்து மனிதர்களல்லாத சகலவற்றினுடனும்  சஞ்சரிக்கத்தொடங்கிவிடுவான்.

சமீபகாலமாய், ஊருக்குள் அவனைப்பற்றிய ரகசிய குறிப்புகள் அடங்கிய பேச்சுகள்  மனித அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அவன் சித்த பிரமை கொண்டிருப்பதாகவும், தனக்குத்தானே உளறிக்கொண்டிருக்கிறான் என்றும் அடிக்கடி கூறப்பட்டது.

அன்றொரு நாள், நெடுங்குளத்து ஏரியில் உள்ள கருவேல மரங்களிடம், அதனுடைய  பால்யம் குறித்த, பலவற்றையும் அவன் பகிர்ந்துக்கொண்டிருந்தான். என நிறைய பாவனைகளோடு ஊரில் உலாவிக்கொண்டிருக்கும் ஒருவர், மிக உறுதியாக மனிதர்கள் கூடுமிடங்களில் எல்லாம் சொல்லிச்செல்கிறார்.

சலங்கைக்கட்டிய பூதம்போல், தென்னம்மட்டைகள் காற்றின் தாளகதிக்கு ஏற்ப நாட்டிய மாடிக்கொண்டிருந்தது. பெற்றெடுத்த வாரிசு ஒன்று சாமந்திக்குளக்கரை நாவல் மரக்கிளையில் தூக்கிலிட்டுக்கொண்ட துக்கம் தாளாத மூதாட்டி ஒருத்தி  ஒப்பாரி வைத்து அதனை நீண்ட இரவின் நிசப்தங்களினூடாக சீராக ஓடவைத்துக்கொண்டிருந்தாள். யார் வீட்டிலோ பசிபொறுக்காத , பச்சிளம் குழந்தை ஒன்றின் அழுகை சத்தமும் மிதந்துக்கொண்டே  அவ்விரவை ஈரப்படுத்திக்கொண்டிருந்தது. ஆத்தா மட்டும் அவன் தலை மாட்டிலேயே அமர்ந்து கடவுள்களை எல்லாம் திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதோ நோவு காவு வாங்கிய தனது புருஷனை நினைத்து கொஞ்சம் திருநீறை எடுத்து, அவனது நெற்றியில் பூசிவிட்டு, அய்யய்யோ, எனது பேரனின் மீது கரிசனம் காட்ட யாருமே இல்லையா? என்று நெடிய பெருமூச்சினை வாசல் கடந்து போகச்செய்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

ஆத்தாவின் சேலை கதகதப்பில், அப்படியே கொஞ்சம் தூங்க எத்தனித்திருக்கவேண்டுமவன். திடீரென பறவைகள் சத்தமிட்டப்படியே, அவனது கண் இமை காடுகளில் வந்தமர்ந்தது. கண்களுக்குள் தேங்கி ததும்பி நின்ற துயரம் நிறைந்த பதின்மூன்று ஆண்டுகால நினைவுகளை அவைகள் கொத்திக்கொறித்துக்கொண்டிருந்தது. அதனால் ரணமாகி கசிந்துருகிய, குருதி முழுதுமாய் படுக்கையை நனைத்து அவனை ஈரப்படுத்திக்கொண்டிருந்தது. எதனையும் விரட்ட மனமற்றவனைப்போல,  இவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த, ஒழுகும் அந்த வீட்டுக்கூரையின் மோட்டு வளையோடு தற்காலிகமாக நட்புக்கொள்ள தொடங்கியிருந்தான்.

ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகளாய்  இப்படியேதானிருந்துக்கொண்டிருக்கிறான். அவ்வப்போது மேலெழுந்த கைகள், காற்றினில் எதையோ தேடி துலாவி சோர்வுடன் ஒடுங்கியது. சிறிது நேரத்திற்குப்பின் முனகல் சத்தம் சீராக அவனிடமிருந்து வந்துக்கொண்டிருந்தது.  பறவைகளுக்கு கொத்திப்பருக கொடுத்த நினைவுகளினூடாக, அவனுக்கு பிடித்தமான அவளுமிருந்ததை  நீண்ட வலிகளுக்குப்பிறகுதான், அவன் உணர்ந்திருக்கக்கூடும். அவனது மெல்லிய தேகத்தை இரவுப்பாம்பு முழுவதுமாய், விழுங்கிக்கொள்வதற்கு முன்பே, அவனது நேசத்துக்குறியவளை, முகாமிட்டிருந்த பறவைகள் கூட்டத்தை விரட்டத்தொடங்கியிருந்தான்.

விரட்டுவதற்காக, அடிக்கடி கைகளையும், அவ்வப்போது கால்களையும் கூட பயன்படுத்திக்கொண்டேயிருந்தான். சில சமயம் ச்சூ...ச்சூ  என்று ஒலியெழுப்பியும், அரற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய செயல் ஒன்றும், அவனது  ஆத்தாவிற்கு புதுமையானதாக தோன்றவில்லை. சமீபகால அவனது செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என நினைத்து அவனது நிலைக்கண்டு வருந்தத்தொடங்கினாள்.

குரூரங்கள் முறைவைத்து உள் நுழைந்துக்கொண்டிருந்தது. அவனது பிடரி மயிற்றைப்பற்றிக்கொண்டு  இனம் காண முடியாத பறவையொன்று, எற்றிசையிலும் பறந்துக்கொண்டிருந்தது. இப்பொழுது அப்பறவைக் கூட்டத்திற்கிடையில், அவனுக்கு பிரியமானவள்  எந்தவித அச்சமும் இன்றி வந்துக்கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட  பதின் மூன்று வருடங்களுக்கு முன்பான  அவளைப்பற்றி யோசிக்கத்தொடங்கியவனுக்கு, புட்டத்தின் மீது வந்து விழும் கரீய நிற கூந்தல், அந்த  அழகான நெற்றி, அதன் மீது மிக கச்சிதமாக  ஒட்டப்பட்டிருக்கும் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அதற்கும் கொஞ்சம் மேலே, எப்பொழுதும் பிசிறின்றி அமர்ந்திருக்கும் குங்குமம், எல்லாமுமே  ஏழுமாத குழந்தையினுடைய மென்மையை  அடையாளப்படுத்திக்கொண்டேயிருக்கும்.
தவணை முறையில் அவள் கொட்டித்தீர்க்கும் புன்னகை,

இவை எல்லாமும் மின்சார ரயிலின் வேகத்தோடு அவனுக்குள் வந்துப்போய்கொண்டேயிருந்தது. இப்பொழுது மெலிந்த தேகத்தில், பொலிவுகளற்றே, நின்றுக்கொண்டிருந்த அவளின்  ஆழ்ந்த நட்பினைப் பற்றி  நினைக்க, நினைக்க பூமியின் மறுகோடி விளிம்புப்பற்றி  அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாய், அச்சமேற்பட்டது  அவனுக்கு.

வெடித்துச் சிதறிய அழுகையை, மிகுந்த அழுத்தம் தந்து அடக்கிக்கொண்டான். அநேகமாய், அவனை விட சில வயதுகள் மூத்தவளான  அவளுடைய முதிர்ச்சி நிறைந்த தோற்றம் தான், அவனை அவ்வாறு செய்திருக்கவேண்டும். ஒரே பள்ளியில் இவனைவிட ஒரு வகுப்பு அதிகமாக படித்துக்கொண்டிருந்தாள். அவள் மீதான  நேசம் விரிவடைய தொடங்கிய நாளிலிருந்தே, அவளைப்பற்றிய  சகல செய்திகளையும் தேடிப்படிக்கத்தொடங்கியவனுக்கு, பாடத்தில் தேர்ச்சி என்பது எளிதாக இருந்தாலும், மதிப்பெண் குறைவதை தடுக்க முடியவில்லை.

இருவரையும்  சூழ்ந்துக்கொண்டு  ரீங்காரமிட்ட  பறவைகள் , கலங்கி நின்ற  இவர்களின் விழிகளுக்குள், துயர மீன்களை  கவ்விக்கொண்டு போய்  வெளியெங்கும்  வைத்து விளையாடவும்,  சாலையோரமாய், ஆடையற்று, தூங்கும், எலும்பும் தோலுமான குழந்தைகளுக்கெல்லாம்  கதைச்சொல்லி தூங்க வைக்கவும்  முனைப்போடிருந்தன.

சரியாக, அவள் நெருங்கி  அவனிடம்  வந்து விட்டாள்.   பதின் மூன்று வருடங்களுக்கு முன், ஒரு விடுமுறை நாளின்  மாலைப்பொழுதாகதான் இருக்கக்கூடும். அவள் வீட்டு  மாமர நிழலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டுவண்டியின், மோத்தடியின்  இருபுறமும்,  ஆளுக்கொரு பக்கமாக  உட்கார்ந்திருந்தனர். முன்னிரவு அவளது  கைகள்  அப்பிக்கொண்ட  மருதாணி     சிவந்து  மஞ்சள் வானத்தையே கர்வம்கொள்ள  வைத்துக்கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பிறகு  வரப்போகும்  அனைத்து மார்கழி  மாத  அதிகாலை பொழுதையும்  மகிழ்வுக்குள்ளாவதற்காக, தான் ஒரு நோட்டு புத்தகம்  முழுவதும்  போட்டு வைத்திருந்த விதவிதமான, கோலங்களையும், அதன் அழகையும் சொல்லி, அவனை மகிழ்வித்துக்கொண்டிருந்தாள். காலையில்  பக்கத்து வீட்டில்  அவளைச்சாப்பிடச்சொல்லி கொடுத்திருந்த  மைசூர்  பாகின்  பாதித்துண்டை, விரலிடுக்கில், பதுக்கி வைத்திருந்த அவள், இவன்  எதிர்பார்க்காத  ஒரு  கணபொழுதில், அவனுக்கு  ஊட்டிவிட்டு, எதுவுமே  நடக்காதது போன்ற முகபாவனைகளோடு பேச்சைத்தொடர்ந்துக்கொண்டிருந்தாள்.

அவளுடைய பிறந்த நாள் ஒன்றிற்கு, அவன் வாங்கிக்கொடுத்திருந்த  நாஞ்சில்நாடனின் மிதவை நாவல் குறித்தும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தாள். அப்பொழுது நேரம் கடந்திருந்தது. கிளம்ப எத்தனித்த அவனின்  இடதுகை பிடித்து, நிறுத்திய அவள், தன் கண்களால், அவனை இமைப்பொழுது சிறைப்பிடித்துவிட்டு விடுதலை செய்தாள்.

எங்கோ தூரத்தில் , கோவில் திருவிழாவில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. இடையிடையே வானம் வெடிக்கும் சத்தத்தைக்கேட்ட , பறவைகள்  இருவரிடமும், நெருங்கிவந்து, ஆதரவை தேடிக்கொண்டது.

அவர்களின் கடைசி  சந்திப்பிற்கு பிறகுதான், அது நடந்திருக்கிறது. வயதிற்கு வந்த பெண்ணை வீட்டிலே வைத்திருப்பது, நெருப்பை மடியில் கட்டி வைத்திருப்பதாக உணர்ந்த  அவளது  அம்மா தான் , அந்த முடிவை எடுத்திருக்கவேண்டும், அவளது வாழ்கைக்கான  ஆணை, உடனடியாக தேடிப்பிடித்து கல்யாணம் முடித்து வைத்துவிட்டார்.

அவளது   அம்மாவின்  செயலுக்கும் நியாயமான காரணம் இருந்திருக்க வேண்டும். கணவனை இழந்து, பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய கடினம், பெண் பிள்ளை  பேருந்தில் ஏறி வெளியூர் படிக்கப்போனாலே, மூக்கு, முழி வைத்து, பேரண் லவ்ளி போட்டு, பவுடரும் பூசி, அலங்கரிக்கிற இந்த  ஊர் கல்யாணம் செய்து கொடுக்காமல் வீட்டில் வைத்திருந்தால், என்னவெல்லாம் பேசும்  என்ற கவலை, அவளது  அம்மாவை  ஆக்ரமித்துக்கொண்ட பிறகுதான், இதெல்லாம்  நடந்திருக்க முடியும்.  மெத்த படித்தவர்களே  , பெண் பிள்ளை விவகாரத்தில், நிறையவே யோசிக்கிறபொழுது, பாவம்  இவர்கள்  சாதாரண மனிதர்கள் தானே, என்று நினைக்க தொடங்கிய நாள் முதலாய், அவளிடமிருந்து முழுவதுமாய்  விலகிக்கொள்ளத் தொடங்கியிருந்தான்  அவன்.

வாசலில் நெடிதுயர்ந்து நின்ற வேப்பமரக்கிளையில், ஜீவிதம் கொண்டிருக்கும்  காக்கைகளில்  இன்னும்  வந்துசேராத ஒன்றிற்காய், மற்றவைகள் கூடி சலசலப்பது, மிக சன்னமாக நடந்துக்கொண்டிருந்தது.

பிரியத்தைக் கொட்டிதரும்  கணவனும், போதுமான வசதிகளும் இருந்தாலும், இன்னும்  அதிகப்படியான  பணம் சேர்க்க நிர்பந்திக்கும், சுற்றங்களால், கல்யாணம் நடந்த நாள் முதலாய்... கணவனை விட்டே பிரிந்திருக்கும், அவள்   குதூகலத்தோடிருக்க, திண்ணையில் தவழ, பொக்கைவாய் குழந்தைகளுமில்லை. ஒவ்வொரு  திருவிழாவிலும்  வாங்கி சேர்த்த , பொம்மைக்கார்களும், மரத்தொட்டிலும், குழந்தைகளின்  நேர்மைப்படாமல்  மங்கியே கிடப்பதாய்....பெருமூச்சொறிந்தாள்.

அருகில் வந்து...அவனது  நெற்றியை தோழமையோடு  வருடிவிட்ட  அவள்... உனக்கென்னாயிற்று, நீ, ஏன்? இப்படி  வாடிப்போய் இருக்கிற, என்றாள்.

இங்க,,...பார், நாம் இருவருமே  பிடித்து  நூற்கட்டி பறக்கவிட்டு  விளையாடுவோமே! வண்ணத்துப்பூச்சி, அதுதான் என்று கூறிய, அவளது கைகளை பார்த்தான்  அவன். நன்றாக வரைந்திருக்கிறாய் என்றான். உனக்கு பிடித்த நிறங்கள் தான் என்றாள்  அவள்.

அப்படியே  , அவளின் மடி மீது தலைசாய்த்து, உறங்கத்தொடங்கியிருந்த  அவனது, தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டிருந்தன  அவளது விரல்கள். மெல்லமாய்  சூரியன்  உற்றுப்பார்க்க , வெகுதூரம் போய்விட்டிருந்தன பறவைகள்.

Thursday, August 5, 2010

பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!


 ஒரு படைப்பு என்ன செய்ய முடியும். பிரபஞ்சத்தின் அடியாழத்தில் மூழ்கி கிடக்கும் சிறு துளி ஆன்மாவை வெளிக்கொண்டு வரமுடியும். உருண்டை வடிவமோ, சதுரமோ, செவ்வகமோ, எதுவோ ஒன்று, அதனை அப்படியே நாம் படுத்துறங்கும் திண்ணையில் வைத்து உருட்டி விளையாடவும் மேன்மை பொருந்தியதொரு படைப்பால் சாத்தியமே. கனமான பொழுதுகளை இலகுவாக்கவும், துயரங்களில் சஞ்சரிக்கும் ஆகச்சிறந்த தருணங்களை மீட்டுருவாக்கம் செய்யவுமான வல்லமை, ஆகச்சிறந்த படைப்புகளுக்கு உண்டு. அதற்கு இணையான தகுதி அதை உருவாக்கிய படைப்பாளிக்கும் உண்டு.

வெறும் அழகியலை மட்டுமே ஆதாரமாக கொண்ட படைப்புகள், அழகியல் குறித்த பார்வைகளும், வியாக்கியானங்களும் மாறுகிறபோது, ஒன்று அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளலாம், இல்லை, நீர்த்துப்போகலாம். இவை இரண்டுக்குமே நிறைய சாத்தியங்கள் உண்டு., முன்வைக்கும் அழகியலை பொறுத்து அவை அமைந்துவிடுவதற்கும் அநேக சாத்தியங்களும் இருக்கின்றன.

ஆனால் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அதற்கு ஆதாரமாக விளங்குகின்ற கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை சுமந்து நீள்கிறதொரு படைப்பானது, அம்மக்களின் வாழ்வியல் தேவைகளோடும், அவர்தம் நடைமுறை அழகியலோடும், ஒருசேர பிணைந்திருப்பதால், அதனுடைய ஆயுள் என்பது வேர் சார்ந்ததும், அது பற்றி மேலழெ தவிக்கும் மண்ணோடும் தொப்புள்கொடி உறவு கொண்டது.

கீழைநாட்டுக்கதைகளுக்கும், அதன் உயிருக்கும் உடமைவாதியாகிய மார்கெரித் யூர்ஸ்னாரின் படைப்புகளின் மைய ஓட்டம் விளிம்புநிலை மக்களையும், அவர்கள் தெரிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு வாழ்வியல், அது முன்வைக்கும் மகிழ்வு, அதனூடாக வந்திறங்கும் துயரம், இரண்டின் நீட்சியாக கேள்விகளற்று பயணிக்கும், அம்மக்களின் ஆழமான நம்பிக்கை, இவற்றை எள்ளி நகையாடமல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகார மையத்தின் பிடிப்பையும் போகிறபோக்கில் தொன்மங்களினூடாக அடித்தளமிட்டு பேசி செல்வதோடு ஆகப்பெரிய விவாதத்தையும் அறுதியிடுகிறது.

மார்கெரித் கதைகளினூடாக பிரவேசிக்கும் கதாபாத்திரங்கள், தான் நேசித்த அதி உன்னதமான ஒன்றுக்காக, தங்களை ,முழுமையாக விடுதலை செய்துக்கொள்ளும் மனோபக்குவம் வாய்ந்தவர்களாகவே அநேகமான கதைகளினூடாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பரந்து விரிந்த சமூகப்பரப்பில், அது வரையறுத்து ஒழுங்கமைத்த எந்தவொரு முகாந்திரத்தின் எல்லைகளுக்குள்ளும், பிரவேசிக்க மறுக்கும் சுதந்திரமான மனிதர்கள், மார்கெரித்தின் கதை மாந்தர்களாக சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்தவொரு திட்டவட்டமான வாழ்க்கையும், உறுதிசெய்யப்பட்ட கொள்கைகளும், சார்பு நிலைகளும் இவரது கதாபாத்திரங்களை எதுவும் செய்யமுடிவதில்லை.

அதி உன்னத புத்திசாலிகளும், வெறும் கிராமத்து யதார்த்தமான மனிதர்களும், அவர்களது உணர்வுகளும் எல்லாமுமே ஒரு வாழ்வியலை முன்வைத்தும், அதனை எதிர்கொள்ளும், அல்லது விட்டு விடுதலையாகி ஓடும் இரண்டுவிதமான மனநிலை வாய்க்கப்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவருடைய கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவரவரளவில் எல்லையற்ற சுதந்திரம் இருந்துக்கொண்டே இருக்கிறது

. அதே சமயம் செய்து முடிக்கவேண்டிய பொறுப்புகளும் ஏராளமாய் நிறைந்துக் கிடக்கிறது. சுதந்திரத்திற்கும், பொறுப்புக்குமான இடைவெளியை சிறிதாக்கிக்கொள்ள இவர்களின் மன்றாடுதல் நீடிக்கிறது. அதே நேரத்தில் கீழைநாட்டுக்குறிய விதிகளின் கைப்பிடிக்குள் சிக்கி, இம்மனிதர்களின் சுதந்திரமும், பொறுப்பும் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது.
ஆக இருத்தலும், இருத்தல் சார்ந்த வியாபித்தலும் எல்லாக் கதைகளிலுமே வாழ்வியலாகவே நீடிக்கிறது. பொறுப்பு , சுதந்திரம், விதி மூன்றில் எதனை தேர்வு செய்வது என்ற குழப்பமும், அச்சமும், இறுதியில் விதி வசமே தங்களை ஒப்புவித்து , அதன் போக்கிலே நகர்ந்துக்கொள்கின்றது.

நாம் ஒவ்வொரு கதையாக வாசித்தகளுகிறபோது. இத்தொகுப்பின் முதல் கதையான உயிர்தப்பிய வாங்ஃபோ நம்மை கடைசிவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாங்ஃபோவின் ஓவியத்தின் மீதும், அந்த ஓவியங்களை நேர்த்தியாய் பிரசவிக்கும் தூரிகையின் மீதும், மேலதிகமாக வாங்ஃபோவின் எளிமையின் மீதும், தீராத காதலும், அபரிமிதமான வேட்கையும் கொண்டு வாழ்தலை அதன் பொருட்டு ஒப்படைத்த அவரது சிஷ்யன் லிங் நம்மை ஆட்கொண்டு விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்,

இருந்தபோதிலும் லிங்கின் பின்னணி, அவன் வாழும் எதற்கும் பஞ்சமில்லாத சூழல், ஒரு செல்வ சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு, எல்லாவற்றையும்  விட்டொழிந்தவனாய், சொற்களிலில்லை, செயலில் நிறைவேற்றிய விதம். லிங்கை, நாம் கெளதமப்புத்தரின் ஞானத்தோடு தொடர்புப்படுத்தி விவாதிக்கத்தோன்றுகிறது
.
புத்தரின் ஞானத்திற்கு குறைவில்லாத ,அதே அளவுக்கு சமமான, இல்லை, இல்லை இன்னும் அதிகப்படியான ஞானத்தை பகிர்ந்தளித்து இருக்கிறான் என்றே சொல்லத்தோன்றுகிறது.
வாங்ஃபோவின் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய முடிச்சுகளை சுமந்து செல்வதில் லிங்கிற்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் இருந்துக்கொண்டே இருக்கிறது. இந்த குருவும், சிஷ்யனும் ஹான் பேரரசின்(கி.மு 206 லிருந்து, கி.பி.220 வரை சீனாவில் ஆதிக்கம் செலுத்திய அரசம்பரம்பரை) தெருக்களைக்கடந்து எங்கோ சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.  
தூரிகைகள், கொஞ்சம் சைனா மை, அரக்கும் அடங்கிய ஒரு டப்பா, சுருட்டிவைக்கப்பட்ட பட்டுத்துணி, அரிசி மாவினால் செய்யப்பட்ட காகித உருளைகள், ஆகியவற்றைத்தவிர உலகில் வேறு எந்தப்பொருளுமே உடமையாக்கிக்கொள்ள தகுதியானது அல்ல என்று வாங்ஃபோவிற்கு தீர்மானமான எண்ணம். அவரது சிஷ்யன் லிங்கிற்கு, தனது குருவிற்கு உண்மையான, விசுவாசமான சீடனாக இருப்பதை தான் தனது ஆகச்சிறந்த பொறுப்பாக, ஏற்றுக்கொண்டு வாங்ஃபோவின் சொத்துக்களை, நேசத்திற்குரிய காதலியை சுமந்துசெல்வதுப்போல சென்றுக்கொண்டிருக்கிறான்.

வாங்ஃபோவும், லிங்கும், தங்களுக்கான சுதந்திரத்தை தேர்வு செய்துவிட்டார்கள். ஆனால் ஒரு சிறு வித்தியாசம், வாஃங்போவின் சுதந்திரம் இயற்கையுடனும், அதன் தன்னிச்சையான போக்குடனும் கட்டமைக்கப்பட்டு முன்னகர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் லிங்கின் சுதந்திரம் வாங்ஃபோவை மையங்கொண்டே நகர்கிறது. இரண்டாவதாக லிங் தனது பொறுப்பு என்று வாங்ஃபோவிற்கு சேவை செய்வதை தெரிவு செய்தும் நகருகிறான், அதன் படியே செயல்புரிந்தும் போகிறான்.அவனது ஆழ்மனதிற்கு மட்டும் இதுதான் விதி என்ற உணர்வும் சீராக நீந்திக்கொண்டிருக்கின்றன. 

தன் குருவிற்காக தனது சொத்துக்களை எல்லாம் இழக்க துணியும் லிங், இனி ஒன்றுமே இழப்பதற்கு இல்லை என்றான பிறகுதான் இப்படி போய்க்கொண்டிருக்கிறான். எல்லாப்பொலிவுகளும் அற்றுப்போன அந்தப் பிராந்தியந்தில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற பொழுதுதான் அவர்கள் ஹான் பேரரசிற்கு போனார்கள். 

வாங்ஃபோ தன் வண்ணக் கலவைகளால் அள்ளித்தெழித்த ஓவியங்கள் பேரரசின் இளவரசனை எப்பொழுதும் அச்சுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் வாங்ஃபோவோ, எந்தவொரு அரசவைக்கோ, அந்தப்புரத்திற்கோ போனது இல்லை.,

பேரரசர்களின் அவைக்கு அவர் சென்றதே இல்லை. குடியானவர்களின் குடிசைகள், நாட்டியக்காரிகள் இருக்கும், புறநகர் பகுதிகள் அல்லது கூலியாட்கள் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கும் இடங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் வாங்ஃபோவின் கால்களும், பசியோடிருக்கும் மனமும் சர்வகாலமும் பயணித்துக்கொண்டே இருக்கிறது. அவரது தூரிகை, வண்ணம் குழைந்து தீட்டியது என்னவோ, இந்த விளிம்பு நிலை பிரதிகளின் வாழ்வியலையும், அதன்  அழகியலையும் தான்.  

ஹான் பேரரசின் இளவரசன் உள்ளிட்ட, சகலருக்கும் இருந்தது பத்தாயிரம் வாழ்க்கை, ஆனால் வாங்ஃபோவிற்கு இருந்ததோ ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் முடியும் தருவாயில். இதனை நினைத்து அவர்கள் இருவருமே ஒருபோதும் வருந்துவதேயில்லை.

மரணத்தின் பால், என்ற மற்றுமொரு கதை, ஆசியநாடுகளின் மிக ஆழமான கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், அதற்குள்ளாக நிகழ்கிற சம்பவங்களுமாக பயணிக்கிறது. மனிதர்கள் உயிரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியும், தங்களுக்குறிய தேவைகள் அதிகரிக்கிற போதும், சுயம் சார்ந்தும், சுயநலம் சார்ந்தும் எடுக்கும் முடிவுகள், மனிதர்களை தனிதனித்தீவுகளாக மாற்றத்தொடங்குகிறது. அதே சமயம், குரூரங்களையும், வஞ்சகத்தையும், சுமக்கும் பிரதிகளாகவும் பிராகசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.      

ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் என்று தொடங்கும், இந்தக் கதை, நம்மூர் வாய்மொழிக்கதைகள் மாதிரியே நீண்டு, இறுதியில் ஒரு அப்பாவி, புத்திசாலிப்பெண்ணின் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. ஆனால் பால் குடி மாறாத, பசி பொறுக்காத அவளது குழந்தைக்காக, மட்டும் அவளது உயிரற்ற உடலில், இருந்து பால் சுரந்துக்கொண்டே இருக்கிறது. இது அல்பேனிய நாட்டு வழக்காறு கதையினை மையமாகவைத்து மார்கெரித்தால் அதன் ஈரம் கசியாமல் சொல்லமுடிகிறது.

 துருக்கியக் கொள்ளைக்காரர்களை வரவிடாமல் கண்காணிப்பதற்காக ஒரு கோபுரத்தை அந்த மூன்று சகோதரர்களும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்ததாலோ, கூலி அதிகமாக இருந்ததாலோ, அல்லது சிறந்த குடியானவர்களுக்கே உரித்தான வகையில் தங்கள் கைகளை மட்டுமே நம்பியிருந்ததாலோ, கட்டட வேலையைத் தாங்களே பார்த்துக்கொண்டார்கள். அவர்களுடைய மனைவிகள் ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வந்தார்கள்.

 இப்படி பொக்கை வாய் கிழவி ஒருத்தி, நம்வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, மழலைமாறாத தனது பேரப்பிள்ளைகளுக்கு கதைசொல்வது போல எந்த சிரமமும் இல்லாமல், ஒரு கதை சொல்லியாக மார்க்கெரித் சொல்லிக்கொண்டே போகும் போது, ம்..ம்..ம் என்று சொல்லத்தோன்றுகிறது. அதே வேளை இறுதியை நெருங்கும் போது நம்மை ஒரு அமானுஷ்யம் சூழ்ந்துக்கொள்ளத்தொடங்குகிறது.

சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துமுடித்துவிட்டுக் கோபுரத்தின் கூரையின் மேல் மூலிகைக் கொத்து ஒன்றை வைக்கப் போகும் போகும் ஒவ்வொரு சமயத்திலும் இரவில் வீசும் காற்றும், மலையில் வசிக்கும் சூனியக்காரிகளும், அதைக் கலைத்து விட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கோபுரம் இடிந்து விழுவதற்கு( நம்மூர் காளஹஸ்திப்போல) அநேக காரணங்கள் உண்டு. தொழிலாளர்களின் திறமையின்மை, பூமியின் விருப்பமின்மை, கற்களைப் பிணைக்க போதுமான அளவு காரைக்கலவை இல்லாதது என்று பல காரணங்களைச் சொல்லமுடியும் அல்லது கட்ட ஒதுக்கிய நிதியில், முக்கால் வாசியை பொறுப்பு வகிப்பவர்கள், தங்களது வங்கிக்கணக்கில் ஒதுக்கிவிடுவது இப்படி ஏராளமான விஞ்ஞானப்பூர்வமான காரணிகள் பலவும் உண்டு.

ஆனால் அதிகார வர்க்கம் மக்களுக்கு ஒரு போதும் விஞ்ஞானத்தை சொல்ல முயலுவதில்லை, காரணம் விஞ்ஞானரீதியாக மனிதன் யோசிக்கத்தொடங்கிவிட்டால், அதிகாரத்தின் மையம் அந்தக் கோபுரங்களைப் போல சரிந்து விழ ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த ஆண்டு விக்ரதி வருடம், இந்த வருடத்திற்கு செவ்வாய் என்ற கிரகம்தான் அதிபதி, செவ்வாய்க்கு ஆயுதம் நெருப்பு, அதனால்தான் காளஹஸ்தி கோபுரம் வீழ்வதற்கு முன்னால், இடி விழுந்து எச்சரிக்கை மணியடித்தது. இது நம்மூர் நம்பிக்கைகள்.

ஆனால் செர்பிய, அல்பேனிய, பல்கேரியக் குடியானவர்கள் இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணத்தைத்தான் கண்டார்கள். கட்டடம் இடிந்து விழாமல் அதன் அடிப்பகுதியில் ஒரு ஆணையோ, பெண்ணையோ நிற்கவைத்து அவர்களைச்சுற்றி சுவர் எழுப்பிவிட்டால் அவர்களுடைய எலும்புக்கூடு கற்களின் பளுவான சதையை இறுதி நாள் வரை தாங்கிக்கொள்ளும் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையின் விளைவுதான் மரணத்தின் விளிம்பில் கற்களுக்கு நடுவில் நின்றுக்கொண்டு இருக்கும் அந்த அப்பாவி, புத்திசாலிப்பெண். ஆனால் அவள் கேட்டுக்கொண்டதற்கு, வஞ்சகம் பொருந்திய அந்த இரண்டு ஆண்களும், அதாவது அவளுடை கொளுந்தன் மார் இருவரும், அவளது மார்பகத்தை மட்டும் சில காலங்களுக்கு கற்களை வைத்து மூடாமல் விட்டுவைத்திருந்தனர். அந்த தாயின் எல்லா உறுப்புகளும், மரணித்துப்போய்க்கொண்டே இருந்தாலும், அவளது குழந்தைக்காக அந்த மூடபடாத மார்பகத்தில் இருந்து சுரந்துக்கொண்டேயிருந்தது பால். குழந்தை பால் குடி மாறியதும். கற்களால் மூடிக்கொண்டது அவளுடைய மார்பகங்களும்.

மரணத்தின் பால் கதை விதியின்பொருட்டு எதையும் இழக்கும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதர்களையும், இது விதி என்று தெரிந்தப்பிறகு, அந்த விதிக்கு மற்றவர்களை பலி கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மனிதர்களையும் அவரவர் சார்ந்து பேசுகிறது.

மூன்று சகோதரர்களும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதியின் பொருட்டே செயலாற்றத்தொடங்குகிறார்கள். மூத்தவன் தன் மனைவியை ரகசியமாக வெறுக்கிறான். அவளை எப்படியாவது  இந்தத்திட்டத்தின் மூலம் கழித்துக்கட்டிவிட்டு, செம்பட்டை நிறக்கூந்தலுடன் இருக்கின்ற ஒரு அழகான கிரேக்கப் பெண்ணை அடைந்துக்கொள்ள இந்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ள திட்டமிடுகிறான். இரண்டாமவனும் தன்னுடைய மனைவியை எச்சரிப்பதாக சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கடைசி சகோதரன் மட்டும்  அல்பேனிய, பல்கேரிய மூதாதையர்களின் நம்பிக்கையை, நிறைவேற்றும் நோக்கத்தோடு பெருத்த சோகத்துடன் வீட்டுக்கு திரும்புகிறான்.

. இப்படியாக மார்கெரித்தின் மரணத்தின் பால் கதை முடிகிறபோது நம்மை சூழ்ந்துக்கொண்ட அமானுஷ்யங்கள் விலகி. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலுமே பெண் என்பவள் பொறுப்புகளுக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டங்களில் மட்டும் சிக்கித்தவிக்கவில்லை. ஆணாதிக்க கரங்களுக்குள்ளும், அதுவே விதி என்றும் மரணித்துப்போன கோடாணு கோடி பெண்கள்.இன்றும் உலக விளிம்புநிலை சமூகத்தின் பெண் தெய்வங்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.    
 
இவ்வாறு அநேக கதைகளும் கீழைநாட்டு தொன்மங்களுடனும், அதன் எச்சங்களுடனுமே பயணிப்பது வியக்கவைக்கிறது. மார்க்கோவின் மோசமான நடவடிக்கைகளாக துருக்கியர்கள் பார்ப்பது, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த செர்ப்பியன் மோசமானவன் என்ற பார்வைதான். ஆனால் துருக்கிய மனிதர்களுக்கும் சுதந்திரமானவர்களும், ஈரம் நிரம்பியவர்களும் இருக்கிறார்கள் என்பது கதையை மட்டுமில்லை. பூமியைக்கூட சமநிலையில் வைத்துப்போகிறது.

ஸ்கூட்டாரி நகரத்தின் பாஷாவின் விதவை, மார்க்கோவைப் பற்றி இரவுகளில் கனவுக்காண்பதிலும், பகலில் அவனுக்காகக் காத்திருப்பதிலும் பொழுதைக் கழித்தப்படி இருக்கிறாள். கடலின் மென்மையான முத்தங்களால் உறைந்துப்போயிருந்த மார்க்கோவின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள். வேலைக்காரிகளின் பார்வையில் படாமல் தன் படுக்கையில் அவனுக்குக் கதகதப்பூட்டுகிறாள். இப்படி மார்க்கெரித் மார்க்கோவின் புன்சிரிப்பு என்ற கதையினூடாக துருக்கிய, செர்பிய நாட்டார் மரபுகளை பிணைத்து கொண்டு செல்கிறார்.

 துருக்கியில் சிறைபிடிக்கப்பட்ட மார்க்கோவை, எப்படியும் பார்ஷாவின் விதவை காப்பாற்றிவிடுவாள். என்று நினைக்கத்தொடங்கிய சிறு வினாடிகளுக்குள் மார்க்கோவின் எதிராக பாஷாவின் விதவை மாறிவிடுவதும்  எல்லோருக்குமான சமூக எதார்த்தம்.
செத்தப்பிணமாய் கிடக்கும் ஒரு செர்பியனின் முகத்தில் லேசாக, மெலிதாக ஒரு புன்சிரிப்பு பிரவேசித்தால் சும்மாய் இருப்பார்களா? துருக்கியர்கள்,

எவர்கள் கண்களுக்கும் தெரியாத அந்த மார்க்கோவின் புன்சிரிப்பு ஹாய்ஷெவின் கண்களுக்கு மட்டும் படுகிறது. எங்கே காட்டிக்கொடுத்துவிடப்போகிறாளோ? என நம் ஆவல் மேலிட தூண்டுவது, உலகம் முழுக்க வாழ்ந்துச்சென்ற தாத்தாக்களும், பாட்டிகளும் நமக்காக நம்முடைய திண்ணைகளில் பரப்பிவைத்துவிட்டு போயிருக்கும் கதைகளுக்குறிய வலிமை.

மார்க்கோவின் புன்சிரிப்பை பார்த்துவிட்ட ஹாய்ஷெவினுக்கு அவன் மிகுந்த அழகாய் இருப்பதாகப்படுகிறது.அந்த புன்சிரிப்பை மறைக்கும் விதமாக அந்த துருக்கிய சுல்தான்களின் வம்சாவளிப் பெண்ணான ஹாய்செவின், தன்னுடைய கைக்குட்டையை கீழே தவறவிடுகிறாள். அதன் பிறகு பெருமிதத் தொனியில் சொல்கிறாள் இப்படியாகஇறந்து விட்ட ஒரு கிறித்தவனின் முன்னால் நடனமாடுவது சரியல்ல, அதனால்தான் அவனுடைய வாய் தெரியாமல் இருக்க அதை மூடிவிட்டேன் என்றும்,அதைப் பார்த்தாலே பயமாயிருக்கிறது என்றும்.

  

இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்குள்ளுமே, சீவலப்பேரிப்பாண்டிகளும், கோவில்பட்டி வீரலட்சுமியும், நல்லத்தாங்களும், சந்தனக்கடத்தல் வீரப்பன்களும், வாட்டாக்குடி இரணியங்களும், வேதாரண்யம் பள்ளிவேன் கவிழ்ந்ததும் குழந்தைகளைக் காப்பாற்ற போராடி மரணத்தின் மடியைத்தழுவிய தாய் சுகந்தி டீச்சரும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.