( சூரியன் தனித்தலையும் பகல் கவிதை நூலை முன்வைத்து)
வாழ்வின் நெடியதூரம் செறிவு மிகுந்த துயரத்தை மட்டுமே உடுத்திக்கொண்டு
பிரவேசிக்கும் தமிழ்நதிக்கான பொழுதுகளனைத்திலும், ஏமாற்றங்களும், தவிப்புகளும்
தாங்கவொணாத வேதனைகளும் புரையோடிக்கிடக்கின்றன. இவை அனைத்தையுமே துல்லியமானதொரு தளத்திலிருந்து பகிர்ந்துக்கொள்வதே
சூரியன் தனித்தலையும் பகல்.
பேச்சிலிருந்து
கவிதைக்கும், கவிதையினூடாக ஆழ்ந்த
மெளனத்திற்கும் சென்று இறுதியில் தூய பிராந்தியத்திற்குப் போய் இயற்கை விதிகளுக்கு
ஏற்பாட்ட நிர்மாணிக்கப்பட்ட நிசப்தங்களின் மீதானதொரு உலகத்தைச் சென்றடைகிற
தமிழ்நதியின் கவிதைகளை வாசிக்கிறபோது உண்மையின் பொருட்டு பெரும்பாலனவற்றை இழக்க
நேரிட்டவர்களின் வேதனையினை உள்வாங்கி ஈரம் கசிந்துருகும் நிலை வாய்க்கிறது.
தமிழ்ச்
சூழலின் நவீன கவிதையின் பிதாமகனான பாரதியிடமிருந்த அநேக பிரதிபலிப்புகளில்
ஒன்றாகிய வேதாந்த விசாரங்களை விதந்தோதுதலின் மீதேறி, தற்போதைய நவீன கவிதை என்பது விபூதி வீச்சமும், பூக்கள்வாசமும் கொண்ட கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களின்
விரல்களுக்குள்ளாகவே பயணிக்கிறது. ஆனால்
குருதி வீச்சமும், மரண ஓலமும்
துப்பாக்கிச் சத்தமும், புலம்பெயர்தலும்
அதிகாரவர்க்கத்தால் திட்டமிட்டு இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின், கவிதைச் சூழல் தமிழகத்தின் போக்குக்கு
எதிர்மறையானது.
ஆரம்ப
காலந்தொட்டே சமூக, அரசியல், வடுக்கள் போன்ற சகல கூறுகளையும், பதிசெய்யும் பொழுது அழகியலோடும், நேரடித்தன்மையோடும் பேசக்கூடிய ஒருவிதமான
தொன்மத்தை தன்னகத்தே கொண்டு ஈழத்தின் கவிதைத்தளம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து மற்றுமொரு நம்பிக்கை பெறத்தக்க
படைப்பினை சூரியன் தனித்தலையும் பகலாகத் தமிழ்நதி தந்திருப்பது என்பதானது, சமகாலச்சூழலில் ஈழத்தின் துயரரேகைகளைத்
தவறின்றி புரிந்துக்கொள்ளும் மனநிலையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிடும்.
மயில்
அகவும்/ வன்னியின் விறு கூடொன்றில்/ காதோரக்குழல் விலக்கி/
முத்தமிட்டுத் துயில் கலைக்கும் விடியலின்றி(காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி) என்ற வரிகளின் வழியாக சனநாயத்தின் அடிப்படை
ஊற்றுக்கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம், மற்றும்
சகோதரத்துவத்திற்கு எதிரான ஈழத்தின் சூழலிலிருந்து விலகிச் சென்றாலும், சென்றவிடத்திலுள்ள பாதுகாப்பாற்ற, நிச்சயமற்ற வாழ்க்கை முறையை அடையாளத்தை
முன்னிறுத்துவதன் வாயிலாக, இவ்விடத்தில்
கவனங்கொள்ளத் தக்கவராகிறார். வாழ்தலும், வாழ்தல் பொருட்டும் அவ்விடங்களில்
நிகழ்த்தப்படும், அந்நியப்படுத்தப்படுதல், இவற்றினூடாக வியாபித்துப் படரும் துயரத்தின்
பதிவாகவும் அமைந்துவிடுவதோடு, வேர்களை
மீட்டுருவாக்கம் செய்வதற்கான அவசியத்தையும், இழையோடச் செய்துவிடுகிறார்.
இவ்வாறான
பூகோள ரீதியிலான பாதுகாப்பு உணர்வினை ஏக்கமாக பதிவு செய்திருப்பதன் மூலமாக
சனநாயகத்திற்கு எதிரான உளவியல் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால், பூமியின் எப்பகுதியிலும் துள்ளி வெளிப்படுகிற கொஞ்சநஞ்ச சனநாயக
மதிப்பீடுகள்கூட மெல்ல அழிக்கப்பட்டுவரும், செய்தியையும் மனிதனினி உணர்வு என்பது சமூகவாழ்நிலையில் இருந்தே
நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் சொல்லிச்செல்கிறார். இத்தொகுப்பானது மேற்குறித்த ஏக்கம் நிரம்பிய அநேக குரல்களின் சாட்சியமாய்
வாசிக்கக் கிடைக்கிறது.
கட்டிடக்காட்டின்
முடிவில் தொடங்கும்/ ஊசியிலை
மரச்செறிவைக் காணுந்தோறும்/ வன்னியில்
பனிபெய்த விடியலில்/ மீள
விழித்தெழுகிறேன்/ கடல்தாண்டி
வருகிறது உளுந்து வாச்னை/ கூடவே
பாம்புகளின் நினைவும்(ஞாபக வாசனை) என்ற வரிகளில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் சார்ந்து விளைகிற எதிர்
எதிர் முரண்பாடுகளை இருவேறு வாழ்வியல் சார்ந்து சிறந்தவற்றை முன்னகர்த்தி
நினைவுகளினூடாக தொனிக்கச்செய்கிறார்.
மேலும்
முதல் உலகநாட்டு இருப்பும், அதனையொட்டிய
பிரயத்தனங்களையும், குறிப்பிட்ட
கட்டிடம், ஊசியிலை என்ற
அதிகாரவர்க்கத்தின் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளார். அதனுடைய பரப்பரப்பினையும் இயந்திரகதியான அதனுடைய வாழ்க்கை முறையினையும்
பகடிச்செய்வதற்காக உளுந்து, பாம்பு
போன்ற உழைக்கும் வர்க்கத்தின் குறியீடுகளைக்கொண்டே பகடி செய்யும், செய்யுத்தி ஆழமானதொரு அரசியலை
மிகச்சாதுர்யமாகப் பேசிச் செல்கிறது. இவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி எல்லோருக்கும் பொதுவானதொரு சூழலுக்குள்
பயணிக்கவும் எத்தனிக்கிறார்.
அவலம்
சூழ்ந்த மூன்றாம் உலகநாட்டுப் பிரதிநிதிகளான தங்களுடைய நிலமும், நிலம்சார்ந்த நிகழ்வுகளும் வாழ்வியலோடு
சேர்ந்து பயணித்து முரண்பாடுகளைக் கொண்டு பேசுவதன் ஊடாக இதற்குள் யுத்தம், சீரமைப்பு, என்ற பெயரில் தங்களது வேரடி மண்ணைச் சிதிலமாக்கிக் கொண்டிருக்கும், முதல் உலகநாட்டு வணிக அரசியல் குறித்தும், படிம குறியீடு சார்ந்தும் இயங்கக்கூடிய
இக்கவிதை அதி உன்னதம் பெறுகிறது.
வரலாற்றில்
உண்மையான சிறப்புக்குறியவர்கல் வெகுமக்களும், அவர்களின் உற்பத்தி சார்ந்த உறவுகளும்தானேயன்றி, எப்போதும் தவறு செய்யக்கூடியவர்களான தனிப்பட்ட அதிகாரவர்க்கத்தினர் இல்லை. மேலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள்
மற்றும் தோற்றுப்போனவர்களின் வரலாற்றைக்கூட அதிகாரவர்க்கத்தினரின் விரல்கள்தான்
தீர்மானிக்கின்றன.
இதனை
எதிர்த்து அவ்வப்போது ஆழமாகப் படர்கிற எதிர்வினைகள் எல்லாம் வெறும் கூச்சல், கலகம், என்ற முதலாளித்துவ சொல்லாடல்களின் மூலம் அதிகார வர்க்கம் நிராகரித்து
விடுகிறது. என்ற கவனத்துக்குரிய
அரசியல் ஒன்றைக் கீழ்வரும் அவரிகள் முன்வைக்கின்றன. புனைவுகளின் பெருங்கதையாடல்களில்/ தேவதேவதைகள் பேய்களாயினர்/ நமது
எல்லோருக்குமான அதிகாரம்/ இதன்
வழியாக புரையோடிப்போன வலியினையும், அதற்கு
எதிரான மனநிலை வாய்க்கவேண்டும் என்றும் அழ்ந்த துணிச்சலோடு முன்வைக்கிறார்.
இன்றொரு
நாள் எனினும் என்று தலைப்பிடப்பட்ட கவிதையில்.
அம்மா!மண்டியிட்டுக் கேட்கிறேன்/ உணவருந்தும் பீங்கானை/
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேன்/ சிலீரென்றழும் ஓசையால் உறக்கமும், குழந்தைமையும் கலைக்கப்பட்ட/ அவ்விரவுகளை மீட்டெடுக்க/ என்ற
வரிகளின் உள்ளடக்கமானது ஒருவிதமான பிரார்த்தனையுடன் அமைந்திருப்பது என்பது,பெண் தெய்வங்கள், இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடந்த காலத்திலும் செவிசாய்த்தனர் என்ற
குறுங்கதையாடலுக்குரிய நம்பிக்கையாக இன்றும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் இழையோடுகிற தொன்மம் என்பது
அதிகாரசக்திகளிடமிருந்து தங்களுக்கு வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதலை
நடத்தும் செயலை, தங்கள்
நம்பிக்கைக்குரிய சிறுதெய்வத்திடமே விட்டுவிலகுதல் என்பது ஈழத்தின் போர்ச்சூழல்
விளைவிக்கிற புலம்பெயர்தலில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்களது பகை சக்திகலை
கற்பனையில் மட்டுமே வசப்படுத்தி, நிதர்சனமாக
வென்றுவிடும் நம்பிக்கை, அவற்றில்
மிளிர்கிறது.
எழுத்து, விடைபெறாத அரங்கம்,, பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது, ஒரு நாளும் இரண்டு அறைகளும், மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, நீரின் அணைப்பு, இப்படியாக
தலைப்புகள் உள்ளடங்கிய தொகுப்பு
No comments:
Post a Comment